ஈரோடு: ரம்ஜான் மற்றும் வார விடுமுறையால் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடிவேரி தடுப்பணையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெப்பத்தைத் தணிக்கவும், விடுமுறையை மகிழ்வுடன் கழிக்கவும் ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, கரூர், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர்.பவானிசாகர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த அணை நீர் கொடிவேரி நீர்த்தேக்கத்தில் சென்று சேர்கிறது. அங்கு தேங்கியிருக்கும் நீரில் இருந்து அணையில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாகக் குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதலே வாகனங்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அணைப் பகுதி மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. அதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Comments