காஞ்சிபுரம்: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை கௌதமி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காய்கறிகளை எடை போட்டுக் கொடுத்து பிரச்சாரம் செய்தார்.சட்டப் பேரவை தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு ஆதரவாக நடிகை கௌதமி பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், தேரடி, ராஜாஜி மார்க்கெட் உள்ளிட பல்வேறு பகுதிகளில் சென்று பொதுமக்களிடம் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதற்கிடையே ராஜாஜி சந்தையில் உள்ள காய்கறி கடைக்கு சென்ற கௌதமி, வியாபாரிகளிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அங்கிருந்த ஒரு காய்கறிக் கடையில் அமர்ந்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு காய்கறிகளை எடை போட்டு கொடுத்து, நூதன முறையில் பிரச்சாரம் செய்தார். அதையடுத்து, ராஜாஜி மார்க்கெட் காய்கறி சங்கத் தலைவருக்கு சால்வை அறிவித்து மரியாதை செலுத்தி வாக்கு சேகரித்தார்.
Comments