திருச்சி: எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் தினமும் 3 வேளை ஆனந்த குளியல் போடுகின்றன.திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்து எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டது. இங்கு சரியான பராமரிப்பு இல்லாத யானைகள் கொண்டு வரப்பட்டு வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டதால் இங்கு உள்ள யானைகள் காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலும் யானைகளுக்கு என பிரத்தியேகமாக நீச்சல் தொட்டிகளுக்கு யானைகள் வருவதற்கான சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ள மூன்று தொட்டிகளிலும் யானைகளும் குதுகலத்துடன் உற்சாக குளியல் போட்டு நீந்தி விளையாடி மகிழ்கின்றன. மேலும், வெயில் அதிகமாக இருப்பதால் யானைகளுக்குத் தர்பூசணி, வாழைப்பழம், முலாம்பழம், முட்டைகோஸ், பசுந்தாள் எனப் பல்வேறு வகையான பழங்கள் கொடுப்பதால் உற்சாகமாகக் குளித்த பின்பு உணவருந்தி உற்சாகமாக விளையாடி வருகின்றன. இந்த யானைகள் அனைத்தும் திருச்சி மண்டல வனத்துறை அலுவலர் மேற்பார்வையின் கீழ் வனத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Comments