கடலூர்: திமுக அரசால் தமிழ்நாட்டில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் சசிகலா, அக்கட்சி வேட்பாளர் எஸ்.ராமசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது சசிகலா பேசுகையில், ”திமுக அரசு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் மீதும் ரூ.2 லட்சம் கடன் வங்கியுள்ளது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அளித்த 550 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. மாநிலத்தில் அத்தியவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக அரசால் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை.மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சித்து வருகிறார். இதே போன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாக்குகளுக்காக, வாய்க்கு வந்ததை தேர்தல் வாக்குறுதியாக அளித்து மக்களை ஏமாற்றுகிறார். இவர்கள் இருவருக்கு வாக்களிக்கக் கூடாது” என்றார்.தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசுகையில், “எங்களை வெற்றி பெறச் செய்தால், 5 ஆண்டுகளில், 5 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டித் தரப்படும். முதியோர் உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். மேலும் கர்ப்பிணிகளுக்கு நலப் பெட்டகம் வழங்கப்படும். தரமான கிராம சாலைகள், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியும்” என தெரிவித்தார்.
Comments