அரியலூர் : அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தங்க. சண்முகசுந்தரம் பச்சை துண்டில் வைப்புத் தொகையை சில்லறை காசுகளாக கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. அந்த வகையில், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவுடன் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தங்க. சண்முகசுந்தரம் வருகைத் தந்தார். அப்போது அவர் வேட்புமனுவுடன் வழங்க வேண்டிய வைப்புத் தொகை ரூ.10 ஆயிரத்தை, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களாகவும், பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளாகவும் பச்சை தூண்டில் கட்டி எடுத்து வந்தார். வேட்புமனுவை அரியலூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரேமியிடம் சமர்பித்ததுடன், சில்லறையாக கொண்டு வந்த தொகையையும் வழங்கினார். அலுவலகத்தில் இருந்த சக அதிகாரிகள் வைப்பு தொகையை எண்ணி முடித்து சரியாக இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தனர். இதன் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட அத்தாட்சி கடிதங்களை பெற்றுக் கொண்டு சென்றார். சில்லறை காசுகளை எண்ணி முடிக்க அரை மணி நேரமானதால், வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புகழேந்தி சிறிது நேரம் காத்திருந்தார்.
Comments