கும்பகோணம்: திமுக - தவெக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் தவெகவினர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கும்பகோணத்தில் 17-வது வார்டிற்குட்பட்ட துக்கம்பாளையம் தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என கூறி தவெகவினருடன் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் தவெக நிர்வாகிகள் சிலர் காயமடைந்து கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, தங்களது பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாகவும், தவெகவினரை தாக்கியதாகவும் கூறி கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் தொகுதியின் தவெக வேட்பாளரும், கும்பகோணம் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வினோத் ரவி தலைமையில் நூற்றுக்கணக்கான தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதையும் படிங்க: தமிழ்நாடு தேர்தல் பரப்புரை: நாகர்கோவிலில் மோடி; தர்மபுரியில் ஸ்டாலின்!தவெக நிர்வாகிகளைத் தாக்கிய திமுகவின் மாநகரச் செயலாளரும், துணை மேயருமான தமிழழகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா ஆத்மநாதன், தவெகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை தவெகவினர் கைவிட்டனர்.
Comments