அரியலூர்: ஸ்ரீ பூர்ணபுஷ்கலா அய்யனார் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஜெயங்கொண்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத அய்யனார் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சனிப் பிரதோஷமான நேற்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக செல்வ விநாயகர், அய்யனார், கருப்புசாமி, வீரனார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னபடையல் நடைபெற்றது. பின்னர் சாஸ்தா அய்யனார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பிரசாதம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Comments