நீலகிரி: குடியிருப்புகளுக்குள் ஜோடியாக உலா வந்த சிறுத்தைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதி யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன.இதனிடையே அண்மை காலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஜோடியாக பல இடங்களில் உலா வரும் சிறுத்தைகள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வருவதோடு வளர்ப்பு நாய்களையும் வேட்டையாடி செல்வது தொடர் கதையாவே உள்ளது.இந்த நிலையில் அருவங்காடு ஜெகதளா பகுதி குடியிருப்பில் ஜோடி சிறுத்தைகள் வருகை தந்தது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே, அப்பகுதியின் கவுன்சிலர் திலீப், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்றும், வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments