தஞ்சாவூர்: தேர்தல் பரப்புரையில் வாக்கு சேகரிக்க சென்ற தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை அடிப்படை வசதிகள்கூட செய்து தரவில்லை என கூறி கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டியடித்தனர்.தமிழகத்தில் வருகின்ற 23-ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றதை அடுத்து தற்போது நான்காவது முறையாக இத்தொகுதியில் களம் காண்கிறார். இந்த நிலையில், நேற்றிரவு திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி வடுகக்குடி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது தங்கள் கிராமத்தில் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டிய கிராம மக்கள், அவரது பிரச்சார வாகனத்தை முன்னேறிச் செல்லவிடாமல் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கோவி.செழியன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் இதில் சமரசம் ஏற்படாத நிலையில், வேறு வழியின்றி அமைச்சர் கோவி. செழியன் அந்த கிராமத்திற்குள் வாக்கு சேகரிப்பதை தவிர்த்து அடுத்த கிராமத்தில் பரப்புரை மேற்கொள்ள புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments