தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாதன், மாநகராட்சி மேயர் பதவியை இன்று ராஜிநாமா செய்தார். தமிழ்நாட்டில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மேயர் ராமநாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி முதல் மேயராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த ராமநாதன், தனது 45வது வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளை ராஜிநாமா செய்தார். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து, மாநகராட்சி காவலர் ரவி என்பவருக்கு சால்வை அணிவித்து விடைபெற்று சென்றார்.சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சராத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments