திண்டுக்கல்: பழனி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கிரிவீதிகள், அடிவாரம் மற்றும் நகரின் பல பகுதிகள் மீது ஹெலிகாப்டர் ஒன்று பல நிமிடங்கள் தாழ்வாக வட்டமிட்டு பறந்தது. வழக்கத்திற்கு மாறாக ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்ததால் அதன் சத்தம் நகரம் முழுவதும் எதிரொலித்தது. இதையடுத்து ஏராளமானோர் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியே வந்து ஹெலிகாப்டரை ஆர்வத்துடன் பார்த்தனர். மேலும், பலர் தங்களது செல்போன்களில் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், இந்த நிகழ்வு குறித்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது.ஹெலிகாப்டர் எந்தத் துறையைச் சேர்ந்தது, பாதுகாப்பு தொடர்பான ஆய்வுப் பணிக்காக வந்ததா அல்லது வேறு ஏதேனும் அதிகாரப்பூர்வ பணிக்காக இயக்கப்பட்டதா என்பது குறித்து கேள்விகள் மக்களிடையே எழுந்தது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறை சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால், ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
Comments