விழுப்புரம்: இரவு பெய்த கனமழையினால் புதிய பேருந்து நிலையத்திற்குள் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் பாதிப்புக்குள்ளாகினர். அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், செஞ்சி, வளவனூர், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தன.அங்கு மழை நீர் தேங்கியதால் பேருந்துகளை இயக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டனர். தொடர் விடுமுறையை முடித்து சென்னை திரும்பிய பயணிகளும் முழங்கால் அளவிலான நீரில் கடந்து சென்று பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். ஒவ்வொரு கனமழையின்போதும் புதிய பேருந்து நிலையத்திற்குள் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. வாய்க்கால்கள் தூர் வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பாலும் மழை நீரை அகற்ற ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் மழைநீர் தேங்குவதால் அங்குள்ள மக்கள் பயணம் செல்வதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
Be the first to comment