திருப்பத்தூர்: லாரியில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென குக்கர் வெடித்து லாரி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் நெல்லூர் பகுதிக்கு தங்களுடைய சிமெண்ட் மிக்சிங் டாராஸ் லாரியை எடுத்துக்கொண்டு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கேதண்டபட்டி அருகே லாரியை நிறுத்தி லாரியின் முகப்பு பகுதியில் கேஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குக்கர் வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த சுரேஷ் லாரியின் முகப்பு பகுதியில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதனிடையே, லாரி கொழுந்துவிட்டு எரிந்து தொடங்கியது. மேலும், அதில் இருந்த சிலிண்டரும் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்தச் சம்பவம் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் லாரி ஓட்டுனர் சுரேஷ் மற்றும் கிளீனர் கோகுல் ஆகியோரின் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையிலேயே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments