ராணிப்பேட்டை: தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேளாண்மை விற்பனை மையத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த பணி நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முறையாக கண்காணிக்கப்பட்டன. முன்னதாக, சீல் வைக்கப்பட்டிருந்த வேளாண்மை விற்பனை நிலைய குடோன், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதன் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொன்றும் தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுமையாக சரிபார்க்கப்பட்டன. அனைத்து பரிசோதனைகளும் நிறைவுற்ற பின்னரே, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த செயல்முறை முழுவதும் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments