நீலகிரி: ரூ.75 லட்சம் செலவில் குன்னூரில் பட்டுப்புழு வளர்ப்பு பூங்காவை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் அரசு விதை பட்டுப்பண்ணை செயல்பட்டு வருகிறது. அதன் சார்பில் குன்னூர் கோத்தகிரி சாலையில் ஸ்ப்ரிங் ஃபீல்டு அருகே புதிதாக ரூ.75 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்பு பூங்கா அமைக்கப்பட்டது.அதற்காக, இப்பகுதியில் உள்ள புதர்கள் அழிக்கப்பட்டு புல்தரையாக மாற்றப்பட்டு, மலர் நாற்றுகள் நடவு செய்து, அழகுபடுத்தும் பணிகள் நிறைவடைந்தது. தொடர்ந்து, கட்டட அறைகளில் செயல்முறை விளக்கம் அளிக்க, பட்டு வளர்ப்பு தொடர்பான நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பட்டுப்புழு வளர்ப்பு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மேலும், பட்டுப் புழுக்கள், அவை எவ்வாறு பட்டு நூல்களாக பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, கண்காட்சியில் வைக்கப்பட்ட பட்டு நூல் புடவைகளையும் பார்வையிட்டார். பட்டு நூல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அலங்கார மாலைகள், பட்டு நூல் ஓவியங்கள், பட்டுப் புடவைகள், பட்டுகளால் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
Comments