தூத்துக்குடி: தவெக விஜய்யின் ரோடு ஷோ சென்றபோது சுமார் 5 கி.மீ தூரம் வரை சாலையில் திரண்டு நின்ற பொதுமக்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விவிடி சிக்னல் பகுதியில் ரோடு ஷோ நடத்தினார்.இதற்காக திருநெல்வேலியில் இருந்து பிரச்சார வாகனத்தில் தூத்துக்குடி வந்த விஜய் மூன்றாவது மைல் பகுதியில் இருந்து உள்ளே நுழைந்தார். அப்போது, வழிநெடுகிலும் சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் திரண்டு நின்ற பொதுமக்கள், விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.5 பேர் காயம்முன்னதாக, தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த விஜய்யின் பிரச்சார வாகனத்தை 100-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். அப்போது, வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்று மற்றொரு இருசக்கர வாகனத்தின் இது மீது மோதி கீழே விழுந்தது. தொடர்ந்து, பின்னால் வந்த சில இருசக்கர வாகனங்களும் விழுந்து விபத்துக்குள்ளாகின. அதில், 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுதீர் விசாரணை நடத்தி வருகிறார்.
Comments