தஞ்சாவூர்: அய்யாசாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தை முன்னிட்டு பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது.தமிழ்நாட்டில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் கூட்டம் வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் நடத்தப்படும் கூட்டத்தில் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க மாவட்ட காவல்துறையிடம் அக் கட்சியினர் கடந்த 28 ஆம் தேதி அனுமதி கோரியிருந்தனர். அதாவது சுமார் 9 ஏக்கர் பரப்பளவில், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,900 நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் 32 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து கூட்டம் நடைபெறும் செங்கிபட்டி பகுதியில் பூமி பூஜை இன்று போடப்பட்டது. இந்த நிகழ்வில் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments