அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில், 12 ஆண்டுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தொட்டிகுளம் கிராமம் யுத்தப்பள்ளத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில். மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடந்து 12 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில், ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.அதன்படி, கும்பாபிஷேகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நவகிரக ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று (பிப்.22) காலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக, கடம் புறப்பாடு மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக நடைபெற்றது. பின்னர் விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை தரிசித்தனர். மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்காக, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.
Comments