அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் கிராமம் மேலத் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனிடையே ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி கடந்தசில தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து நவகிரக ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு விழா இன்று காலை கடம் புறப்பாடு மங்கள வாத்தியத்துடன் கோயில் விமான கலசத்திற்கு புனித நீரை பட்டாச்சாரியார்கள் ஊற்றினர்.அப்போது பக்தி கரகோஷங்களை எழுப்பி ஸ்ரீ செல்வ விநாயகரை வழிபட்டனர். பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments