தேனி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயிலில் கொடிக்கம்பம் நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.தேனி அருகே வீரபாண்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் சித்திரைத் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற மே 12 முதல் 19ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது.இதற்காக கோயில் வளாகத்தில் கொடி கம்பம் நடுதல் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முல்லை பெரியாறு கரையோரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கன்னீஸ்வரமுடையார் திருக்கோயிலில் முக்கோண வடிவிலான கொடிக்கம்பத்திற்கு பூக்களாலும், வேப்பிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து மேளம் தாளம் முழங்க கன்னீஸ்வரமுடையார் திருக்கோயில் இருந்து முக்கோண கொடிக்கம்பத்தை சுமந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கௌமாரியம்மன் கோயிலை அடைந்தனர். கோயில் வளாகத்தில் கௌமாரியம்மன் சன்னதிக்கு எதிரே முக்கோண வடிவிலான கொடி கம்பம் நடப்பட்டது. கொடிமரம் நடுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடிக்கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி கோயில் வளாகத்தில் கௌரிமாரியம்மனுக்கு விரதம் மேற்கொள்வதற்காக காப்பு கட்டிக் கொண்டனர்.
Comments