திருச்சி: 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மணப்பாறையை அடுத்த மாணிக்கம் பிள்ளைச்சத்திரம் பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையம் கடந்த 20 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. கடந்த நான்கு வருடமாக முன் வைத்த கோரிக்கையை அடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை அங்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் நெல் கொள்முதல் நிலைய அலுவலர், இயந்திர கோளாறு என காரணம் காட்டி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திலேயே நெல் மூட்டைகளோடு இரவு பகல் பாராது காத்துக் கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், நெல் மூட்டைகள் மலை போல் தேக்கமடைந்தால் கொந்தளித்த விவசாயிகள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கொள்முதல் நிலையத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Comments