அரியலூர்: சுவர் விளம்பரத்தை மர்ம நபர்கள் அழித்துவிட்டதாக கூறி விசிகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகேயுள்ள சாளையக்குறிச்சி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஏப்ரல் 14-ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் சமத்துவப் பேரணிக்கு சுவர் விளம்பரம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சுவர் விளம்பரத்தை மர்ம நபர்கள் அழித்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் விசிகவினர் புகார் அளித்திருந்தனர். 3 நாட்களாகியும் மர்ம நபர்களை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த விசிகவினர் ஓட்டக்கோவில் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூர் - செந்துறை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீண்ட நேரம் காத்திருந்தும் போக்குவரத்து சீராகாததால் பேருந்தில் அமர்ந்திருந்த சில பெண் பயணிகள் கைக்குழந்தையுடன் பேருந்திலிருந்து கீழிறங்கி மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினரிடம் பேருந்துக்கு வழிவிடக்கோரி வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு விசிகவினர் மறுத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்துக்கு வழி ஏற்படுத்தித் தந்தனர். இதையடுத்து அரியலூர் - செந்துறை சாலையில் போக்குவரத்து சீரானது.
Comments