வேலூர்: காட்பாடியில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் திருட முயற்சி செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.காட்பாடி நகராட்சி, தாராபடவேடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் தலைமை மேலாளராக அருண் ராணா (45) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி இரவு சுமார் 11:47 மணியளவில், காட்பாடி உழவர் சந்தை அருகில் உள்ள இந்த வங்கியின் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், காட்பாடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றவர் கர்நாடக மாநிலம், ஒசகோட்டா பொங்களூரு பகுதியைச் சேர்ந்த வரதராஜூ (53) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வரதராஜூவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments