திருநெல்வேலி: தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வு பகுதியில் ஏற்பட்ட பழுதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.இதற்காக முக்கூடல், வீரவநல்லூர் செல்லும் சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதான குழாயின் வால்வு (valve) பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக இன்று திடீரென குடிநீரானது, அதிவேகத்தில் வெளியேறியது. பனை மர உயரத்திற்கு தண்ணீர் விண்ணை நோக்கி பீய்ச்சி அடித்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணான நிலையில், தற்போது நீரேற்றமானது தடுக்கப்பட்டு, வால்வை சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகராட்சிகள் பயன்பெறுகின்றன.
Comments