தஞ்சாவூர்: சித்திரை மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தரிசனத்திற்கு வருகை தருவார்கள். அப்படி வரும் பக்தர்கள், சுவாமியை தரிசித்தும் கட்டடக்கலையை வியந்து பார்த்தும் செல்கின்றனர்.உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று (ஏப்.15) தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.அதேபோல் பெருவுடையாருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments