திண்டுக்கல்: ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற போது, தவறி கீழே விழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் விரைந்து மீட்டனர்.மயிலாடுதுறை செல்வதற்காக, திண்டுக்கல்லை சேர்ந்த சுந்தரம் (68) மற்றும் அவரது மனைவி சகுந்தலா (62) இருவரும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, நடைமேடைக்கு வந்த ஒரு ரயிலில் அவர்கள் இருவரும் அவசர அவசரமாகப் பைகளுடன் ஏறியுள்ளனர்.ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அந்த வண்டி நெல்லை-தாதர் செல்லும் சிறப்பு ரயில் என்பதையும், தவறுதலாக ஏறிவிட்டோம் என்பதையும் உணர்ந்த அவர்கள், உடனடியாக கீழே இறங்கியுள்ளனர். அதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் அவர்களுக்கு விரைந்து உதவினர்.இதற்கிடையே, அவர்கள் வைத்திருந்த கைப்பைகள் ரயிலில் சென்றதை கண்ட சுந்தரம், அவற்றை ஓடிச் சென்று எடுத்தார். அப்போது ரயிலின் வேகத்தில் இழுக்கப்பட்ட அவர், எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கும், ரயிலுக்கு நடுவிலும் சிக்கிக் கொண்டார். அதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாலசுப்பிரமணியன், துரிதமாக செயல்பட்டு முதியவரை வெளியே இழுத்து மீட்டார். அதனால், முதியவர் எவ்வித காயமும் இன்றி தப்பினார். முதியவரை நொடிப்பொழுதில் விரைந்து காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரரை அங்கிருந்த பயணிகள் பாராட்டினர்.
Comments