காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் இன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பல பகுதிகளில் திருமண கோலத்தில் தம்பதிகள் வந்து வாக்களித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில உள்ள அறம் வளத்தீஸ்வரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராகுல். இவருக்கும், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி-க்கும் இன்று (ஏப்ரல் 23) காலை காஞ்சிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.இந்த மணமக்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு, ஜோடியாக வந்து தங்களுக்கான வாக்குச்சாவடி மையங்களில் வாக்கினைச் செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். திருமண கோலத்துடன் புதுமண தம்பதி வாக்களிக்க வந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து மணமகன் ரவி ராகுல் கூறுகையில், "அனைவரும் வாக்களிப்பது என்பது கட்டாயம். திருமண நாளில் வாக்கு செலுத்தியது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. தமிழகமே அதிக அளவில் எதிர்பார்க்கும் இந்த தேர்தல் 23 ஆம் தேதி 4 ஏப்ரல் அன்று நடைபெறுகிறது. இது தமிழகத்தின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையான '234' உடன் ஒத்துப்போவது கூடுதல் சிறப்பாக உள்ளது" என தெரிவித்தார்.வாக்கு செலுத்த வந்த மணமக்களுக்கு வாக்கு சாவடியில் இருந்த அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Comments