காஞ்சிபுரம் : அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற இலவசமாக பிரிட்ஜ், சிலிண்டர் மற்றும் மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டர் ஆகியவற்றை காட்சிப்படுத்திய படி வேட்பாளர் சோமசுந்தரம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து வேட்பாளர்கள் பல்வேறு விதமான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று (ஏப்ரல் 6) தாக்கல் செய்தார். அதனையடுத்து இன்று காலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின் போது பிள்ளையார்பாளையம் அதிமுக நிர்வாகி சார்பில் வேட்பாளருக்கு பேண்ட் வாத்தியங்களுடன் புலி ஆட்டம், கட்டைக்கூத்து கலைஞர்கள், சிலம்பாட்டம், கோயில் கொடைகள் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள இலவச பிரிட்ஜ், சிலிண்டர் மற்றும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்றவை காட்சிப்படுத்திய படி வேட்பாளர் சோமசுந்தரம் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Comments