தேனி: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு நடனமாடி திருநங்கைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழக சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்துவதை வலியுறுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வள்ளிநகர் பகுதியில், திருநங்கைகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநங்கைகள் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். முன்னதாக, தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு திருநங்கைகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
Comments