வேலூர்: குடியாத்தம் அருகே பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், குடியாத்தம் அருகே உள்ள பத்தலபல்லி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.6 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பறக்கும் படையினர் அந்த பணத்தைப் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காரில் வந்தவர் கர்நாடகா மாநிலம் தூம்கூர் பகுதியைச் சேர்ந்த சென்னாகவுடா என்பதும், திருமண நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகள் வாங்குவதற்காக அந்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சம் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments