தேனி: திமுக ஆட்சி ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி; ஏழை மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து தருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று தேர்தல் பரப்புரையின் போது போடி தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கரட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "இந்தத் தேர்தல் முடிந்தவுடன் மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாயாக வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும். அதை வைத்து தரமான கடையில் தரமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.மேலும், திமுக ஆட்சி ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி. ஏழை எளிய மக்களுக்கு என்ன தேவையோ அதை தந்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து, கரட்டுப்பட்டி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Comments