தூத்துக்குடி: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் பரதர் நல கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவிற்கான நான்கு இடங்களில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் தேமுதிகவிற்கும் வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள இரண்டு இடங்களில் திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.இதைத் தொடர்ந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை அறிவித்ததற்கு வரவேற்று திமுக அரசுக்கும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு பரதர் நல கூட்டமைப்பு சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்த அறிவிப்பை வரவேற்றனர். மேலும் பரதர் குல மீனவ மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என பரதர் நல கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
Comments