காஞ்சிபுரம்: மார்கழி மாத மூடு பனி காரணமாக காஞ்சிபுரம் மாவட்டமே திடீர் ஊட்டியாக மாறியது. பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர். மழைக்காலம் முடிந்து பனிக்காலமான மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதலாகவே கடும் பனிப்பொழிவும், மூடுபனியும் காணப்பட்டது.காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கோனேரி குப்பம், வையாவூர், ஏனாத்தூர், காரை, செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, விப்பேடு, களக்காட்டூர் புஞ்சையரசந்தாங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டமே திடீரென மலைவாசஸ்தலமா ஊட்டி போல ரம்மியமாக மாறியது.அதே சமயத்தில், இந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக, பொன்னேரி கரை மேம்பாலம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, உத்திரமேரூர் - வந்தவாசி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.மார்கழி மாதம் தொடங்கி, கடந்த சில நாட்களாக கடுங்குளிர் அதிகரித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் ஏற்பட்டு ஊட்டியை போன்று ரம்மியமான சூழ்நிலை நிலவியதை பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.
Comments