சேலம்: சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக மலைக்கிராம மக்கள் வைத்துள்ள விளம்பர பதாகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் ஏற்காடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளது. அதில் ஏற்காட்டிற்குள் நுழைந்தவுடனே உள்ள முண்டகம்பாடி கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அக்கிராமத்திற்கு இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று கூறி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் எல்லை மற்றும் மையப் பகுதியில் கட்-அவுட் வைத்துள்ளனர்.அதில், 'தங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிப்பிட வசதி, கால்வாய் வசதி போன்ற எந்த வசதிகளையும் செய்து தரவில்லை' என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் கிராமத்திற்கு செல்லும் பாதையை தனியார் உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், தங்களது கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்வதற்குக் கூட சாலை வசதி இல்லை என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி, இப்பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு முதல் ஏற்காடு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் வரை என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனாலேயே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தங்களது கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளனர்.
Comments