மயிலாடுதுறை: 100 ஆண்டுகளாக இந்து குடும்பம் ஒன்று பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கஞ்சி வழங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை பகுதியில் உள்ள "அல் ஜாமிஆ" பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களுக்காக, குளிச்சார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் என்பவரின் குடும்பத்தினர் கடந்த நான்கு தலைமுறைகளாக நோன்பு கஞ்சி வழங்கி வருகிறார்கள். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ரமலான் நோன்பு பிறையின் 15-ஆம் நாள் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கி வருகின்றனர்.இந்த சேவையை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனின் கொள்ளுத்தாத்தா கோவிந்தசாமி பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த பணியை நாகராஜனின் தாத்தா ரெத்தினம், தந்தை சேதுராமலிங்கம் ஆகியோர் தொடர்ந்து செய்தனர். தற்போது நான்காம் தலைமுறையாக நாகராஜன் அதே உற்சாகத்துடன் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களிலும், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பேரிடர் சூழ்நிலைகளிலும் கூட இந்த குடும்பம் இந்த சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மத நல்லிணக்கச் சேவையை பாராட்டும் விதமாக, வடகரை பள்ளிவாசல் ஜமாத்தார்கள் நாகராஜன் குடும்பத்தினரை பள்ளிவாசலுக்கு அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
Comments