ஈரோடு: தெங்குமரஹாடா வனப் பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவுக்கு வரும் வாகனங்கள் மற்றும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் பழமை வாய்ந்த ஆதி கருவண்ணராயர் மற்றும் பொம்மதேவி கோயில்கள் அமைந்துள்ளன. பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாட்டை பின்பற்றி திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இக்கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களின் வாகனங்கள், காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடியில் அதிரடிப்பைடை போலீசார் தீவிர சோதனை செய்து அனுமதிக்கபட்டன. மேலும் பக்தர்கள் ஆதார் அட்டை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாளொன்றுக்கு 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் தனி வாகனங்களில் ஆட்டு கிடா, சமையலுக்கு தேவையான பொருட்களும் எடுத்துச் சென்றனர். அரசு பேருந்துகளில் இலவசமாக கோயிலுக்கு சென்று வர கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆதி கருவண்ணராயர் கோயில் பகுதியிலும், வன சோதனைச்சாவடி பகுதியிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என சந்தேகிப்பதால், கண்காணிப்புப் பணிகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளன.
Comments