திருநெல்வேலி: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நெல்லையில் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சுகுமார் உத்தரவின் பேரில், சட்டமன்ற தொகுதி வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும் தேர்தல் தொடர்பான பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தனியார் யோகா மற்றும் ஸ்கேட்டிங் மையம் மூலம் ஸ்கேட்டிங் செய்தவாறு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த வகையில் நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து மானூர் துணை வட்டாட்சியர் ரவி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபுரத்தில் இருந்து நெல்லையப்பர் கோயில் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஸ்கேட்டிங் பேரணி சாப்டர் பள்ளி முன்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒன்று கூடி தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.
Comments