ராணிப்பேட்டை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெறும் இந்த போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது. 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நடைபெறும் இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் பெண்கள் வீடுகளுக்குச் செல்லாமல், இரவு நேரத்திலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் அடிப்படை உரிமைகள், ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments