அரியலூர்: தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.சித்திரை முதல் நாளான இன்று தமிழ் வருடப் பிறப்பு மாநிலம் முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு, அரியலூர் நகர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி (என்ற) பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில், இன்று (ஏப். 14) அரியலூர் செட்டிய ஏரிக்கரையில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து நீண்ட அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து, பக்தர்கள் எடுத்து வந்த பாலால் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டும், மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டும் தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.
Comments