தேனி: திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேன் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தின் முன் பகுதியில் திடீரென புகை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த 15 பேரும் உடனடியாக வேனில் இருந்து இறங்கியுள்ளனர். மேலும், வேன் முழுவதிலும் தீ மளமள பரவி வாகனம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். டெம்போ டிராவலரில் பயணித்த பயணிகள் தீவிபத்து ஏற்பட்டதும் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மேலும், இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், வேனில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்து இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
Be the first to comment