தூத்துக்குடி: திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி உள்வாங்கியதால், சேதமடைந்த சிலைகள் வெளியே தென்பட்டன.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் இக்கோயிலில், தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், கடல் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், நேற்று காலை கடல் சுமார் 50 அடி உள்வாங்கியது. அப்போது பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.அந்த சமயம் சுமார் ஒரு அடி உயரம் கொண்ட கருப்பசாமி சிலை ஒன்று கடற்கரையில் தென்பட்டது. அதனை அங்கு நின்ற ஒருவர் எடுத்து பார்த்தபோது, சிலை சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுபோல் ஏராளமான சிலைகள் கடற்கரையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கடற்கரையில் கரை ஒதுங்கும் சேதமடைந்த சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, கடற்கரையில் ஒதுங்கும் சிலைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
Comments