ராமநாதபுரம்: கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னையை சேர்ந்த நீச்சல் குழுவினர், ஆழ்கடலில் இருந்து சுமார் 550 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், கடல் குதிரை, கடல் யானை, அரிய வகை திமிங்கலங்கள், ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் வலைகளில் சிக்கி உயிரிழக்கக் கூடிய சூழல் நிலவி வருகிறது.கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும், பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் கடல் வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்திலும் சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவர் தலைமையிலான ஆழ்கடல் நீச்சல் குழுவினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கயாக்கிங் மூலம் கடலோரம் மேற்பகுதிகளில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின் தனுஷ்கோடியில் இருந்து சென்னை வரை உள்ள கடலோரப் பகுதிகளில் ஸ்கூபா டைவிங் என்று அழைக்கப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை தினம்தோறும் சேகரித்து வருகின்றனர். தற்போது வரை சுமார் 550 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கடல் பகுதியில் இருந்து அகற்றியுள்ளனர்.
Comments