மகாராஷ்டிரா: நாடு முழுவதும் பெட்ரோல் பற்றாக்குறை குறித்து வதந்தி பரவி வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் பெட்ரோல் பங்கில் 200 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் டீசல் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் - இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்தி குறைக்கப்பட்டு, கச்சா எண்ணெயின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. அத்துடன் சமூக வலைதளங்களில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவிய நிலையில், பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பெட்ரொல் பங்க்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாநகரில் உள்ள சிக்லி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். அப்போது 200 லிட்டர் தண்ணீர் தொட்டியுடன் காரில் வந்திறங்கிய நபர், அந்த தொட்டி முழுவதும் டீசல் நிரப்பினார். மேலும் பெட்ரோல் பங்க் ஊழியரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவருக்கு டீசல் வழங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனிடையே, புல்தானா மாவட்ட ஆட்சியர் கிரண் பாட்டில் பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட வழங்கல் அலுவலர் ருபேஷ் பிஜேவர் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அது இயல்பான விநியோகத்தை பாதிக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
Comments