நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி இன்று (மே 22) துவங்கியது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சார்பாக பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாம் ஆண்டு மலைப் பயிர்கள் கண்காட்சி இன்று (மே 22) துவங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் மலைப் பயிர்கள் காட்சியின் மீனவர்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக கடல்சார் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேயிலை காப்பி, வெற்றிலை, முந்திரி, தென்னை, பனை, பாக்கு, நுங்கு போன்ற பத்து வகை மலைப் பயிர்களை கொண்டு மீனவப் பெண் படகில் மீன்பிடிப்பது போன்ற உருவ அமைப்பும் நங்கூரம் துடுப்பு சங்கு மற்றும் கலங்கரை விளக்கம் போன்றவை தோட்டக்கலைத் துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது. மலைப் பயிர்கள் காட்சியை முன்னிட்டு தேயிலை பயிரிடும் விவசாயிகளுக்கென (4) பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு நிறைவு நாள் அன்று பரிசுகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் ஆகியோர் தனித்தனியே வருகை தந்தனர்.
Comments