அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் இன்று (மார்ச் 21) தமிழகம் உட்பட நாடு முழுக்க வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்த பண்டிகை மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக இந்த பண்டிகை மார்ச் 19 அன்று கொண்டாடப்பட இருந்தது. ஆனால், அன்று பிறை தெரியாத காரணத்தினால் தமிழ்நாடு அரசு தலைமை காஜி மார்ச் 21இல் ரமலான் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.இதன்படி, தமிழகம் முழுக்க உள்ள பள்ளி வாசல்கள் மற்றும் மசூதிகளில் வழிபாட்டிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தவகையில், ஜெயங்கொண்டம் ஜும்மா மசூதி மற்றும் ஜுபிலி ரோட்டில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இங்கு 800-க்கும் அதிகமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்துக் கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சிறப்பு தொழுகையை முடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கி தங்களின் ஈகைத் திருநாள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
Comments