தேனி: உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 கள்ளழகர்கள் ஒரே நேரத்தில் எதிர்சேவை புரிந்து முல்லைப் பெரியாற்றில் இறங்கிய வைபவம் இன்று கோலகலமாக நடைபெற்றது.தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்றிரவு சாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பின்பு கள்ளழகர் குதிரை வாகனத்தில் உப்புக்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. பின்னர் கள்ளழகர் சாமி மூலஸ்தான கோயிலுக்கு கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதேபோல் உப்பார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லைப் பெரியாற்று கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் குதிரை வாகனத்தில் எதிர்சேவை புரியம் வைபவம் நடைபெற்றது.அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 'கோவிந்தோ கோவிந்தோ' என கோஷமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதன்பின்பு ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட பந்தலில் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த கள்ளழகர்கள் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்ய உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments