மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும். அந்த வகையில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர்கள்.சிறப்பு பெற்ற இவ்விழா வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் நடும் விழா கள்ளழகர் திருக்கோயிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஆயிரம் பொன்சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதற்காக அழகர்கோயிலில் உள்ள நூபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் நடப்பட்டது.கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் நடப்பட்டதை தொடர்ந்து கள்ளழகர் மதுரை வரும் போது எழுந்தருளும் அனைத்து மண்டகப் படிகளிலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வரும் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 27 -ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 28-ம்தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்ககல்யாணமும், சிகர நிகழ்சியாக திருத்தேரோட்டம் வரும் 29-ம் தேதியும் நடைபெறுகிறது.
Comments