திருவள்ளூர்: சோழவரம் அருகே தனியார் நிதி நிறுவனம் பறிமுதல் செய்து வைத்திருந்த இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வாகனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் இந்த நிறுவனத்தில் கடன் பெற்று சரி வர தவணை கட்டாத வாடிக்கையாளர்களின் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்தக் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் எரிந்தன. இரு சக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த இடத்தை சுற்றி மழலைப் பள்ளி மற்றும் வீடுகள், குடியிருப்புகள் இருந்ததால், பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்து வெளியேறினர். செங்குன்றம் மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Comments