ஈரோடு: கேர்மாளம் சாலையில் பகல் நேரத்தில் உலா வந்த சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்து, 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் திம்பம் மலைப்பாதையில் நடமாடுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக வனப்பகுதி காய்ந்து காணப்படுகிறது. வனக்குட்டைகளில் தண்ணீர் வறண்டு விட்டது. இதானால், வனவிலங்குகள் இரை தேடி சாலையை கடந்து மறுபுறம் செல்கின்றன. இந்நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று சாலையோரமாக நடந்து சென்றுள்ளது.இதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கினர். எதிர்ப்புறமாக வந்த வாகன ஓட்டிகளும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு வாகனங்களை நிறுத்தினர். வாகனங்களின் இரைச்சல் சப்தத்தால் எரிச்சலடைந்த சிறுத்தை, சாலையோரமாக நின்று வாகன ஓட்டிகளை உற்று பார்த்துவிட்டு வனத்துக்குள் சென்றது. இதை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments