தூத்துக்குடி: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 2500 சில்வர் தட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து பறக்கும் படை அதிகாரி இசக்கி பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது உடன்குடி அருகே உள்ள கோட்டவிளை புதுமனை பகுதியில் தமிழ்செல்வன் என்பவரது வீட்டில் 5 மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 2500 சில்வர் தட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பொருட்களை குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Comments